×

ஆடிமாதம்: கன்னி தெய்வ வழிபாட்டு முறை பற்றி தெரியுமா?

ஆடி மாதம் குலதெய்வ வழிபாடுகளுக்கு முக்கிய சிறப்பு உண்டு. மற்ற தெய்வ வழிபாடுகளைக் காட்டிலும் குலதெய்வ வழிபாடு அனைத்து நன்மையையும் செய்யும் என்பது ஐதீகம். அதுபோல் ஒருவரது குடும்ப முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பது கன்னி தெய்வ வழிபாடு என்பர். ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது.

சக்தி வழிபாடு என்பது தாய்வழி வழிபாடுதான். ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும் கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது.

மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இன்பத்தை கருவாக்கினாள் பெண். உயிருக்குள் உயிர் சுமந்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்தவளும் பெண்தான். இந்த காரணத்தினாலேயே பெண்ணை மகாசக்தியாகப் பார்த்திருக்கிறான் ஆதிமனிதன்.

ஆடி மாதம் அன்று ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அது போல் இந்த ஆடி மாதத்தில் நம் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. அந்தவகையில் ஆடி அன்று கன்னி தெய்வ வழிப்பாடும் நடத்தப்படுகின்றது.

நூறு தெய்வங்களை வழிபடுவதை காட்டிலும் ஒரு கன்னியை வழிபடுவது சிறந்தது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் கன்னி தெய்வத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. குறிப்பாக இந்த கன்னி வழிபாடு கிராம மக்களிடையே வேரூன்றி காணப்படுகிறது. ஆகையால் கன்னி தெய்வம் என்று யாரை வணங்குகின்றோம். மேலும் கன்னி வழிபாடு ஏன் பின்பற்றப்படுகிறது என்பதை குறித்து தெளிவாக இங்கு பார்க்கலாம்.

கன்னி தெய்வம் யார்?

நம் அப்பா வழியில் திருமணம் ஆகாமல் சிறு குழந்தையிலேயே இறந்து போன பெண் தான் கன்னி தெய்வம் ஆகும். மேலும் இறந்த அப்பெண் தெய்வமாகி நம் வீட்டை பாதுகாத்து வருவாள் என்பது நம்பிக்கை. உதாரணமாக நம் வீட்டில் எழும் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பெரியதாக எழாமல் அதனை அப்படியே சமரசம் ஆக்கிக் கொண்டு வரும் சக்தி கன்னி தெய்வத்திற்கு உண்டு.

கன்னி தெய்வ வழிபாட்டு முறை:

நம் வீட்டின் காவல் தெய்வமாக இருக்கும் கன்னி தெய்வத்துக்கு உரிய பூஜை முறைகளை நாம் நம் வீட்டில் கண்டிப்பாக செய்யவேண்டும். இறந்தது கன்னிப் பெண்ணாகவோ அல்லது சுமங்கலியாகவோ இருந்தால் அவர்களது மனம் குளிர்விப்பதற்காகவும், அவர்களது ஆசியும் பெறுவதற்காகவும் முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு, பூஜை விளக்கேற்ற வேண்டும்.

பின் இறந்த அந்த நபருக்கு பிடித்த உணவுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பூஜை அறையில் அவர்கள் படத்திற்கு முன் வாங்கி வைத்து அவர்களை வழிபட வேண்டும். இவ்வாறு நீங்கள் அவர்களை வணங்கிணால் உங்கள் வீட்டில் சுபிக்சங்கள் பெருகும் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நிகழும். குறிப்பாக சுமங்கலிகள் கன்னி தெய்வத்தை வழிபட்டால் அவர்களது மாங்கல்யத்திற்கு பலன் அதிகரிக்கும். மேலும் திருமணமாக கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும், நோய்கள் தீரும்.

The post ஆடிமாதம்: கன்னி தெய்வ வழிபாட்டு முறை பற்றி தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Adhimadam ,Kanni ,Adi ,Kulatheiva ,
× RELATED கன்னி விமர்சனம்